GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

திங்கள், 11 மார்ச், 2019

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள், நேற்று அமலுக்கு வந்தன. நடத்தை விதிகள் விபரம்:

பல்வேறு இனம், ஜாதி, சமயம், சமூகத்தினர் மற்றும், மொழியினருக்கு இடையே இருந்து வரும் வேற்றுமைகள், வெறுப்பை அதிகரிக்கும் செயல்பாடுகளிலோ, பதற்றத்தை கூடுதலாக்கும் நடவடிக்கைகளிலோ, எந்த கட்சியும், வேட்பாளர்களும் ஈடுபடக் கூடாது


* அரசியல் கட்சிகள், மற்ற கட்சிகளை குறை கூறும்போது, அது, அக்கட்சிகளின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய சாதனைகள் மற்றும் பணிகள் குறித்ததாக மட்டும் இருக்க வேண்டும். மற்றவர்களின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை, தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மீதான, சரி பார்க்கப்படாத குற்றச்சாட்டுகளையும், திரித்து கூறப்படும் செய்திகளையும், தவிர்க்க வேண்டும்

* தேர்தல் பிரசாரத்திற்கு, மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களை பயன்படுத்தக் கூடாது

* ஊழல் நடவடிக்கை, வாக்காளர்களுக்கு லஞ்சம், வாக்காளர்களை அச்சுறுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

* மற்ற கட்சிகளின் கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில், தொண்டர்கள் ஈடுபடாமல் இருப்பதை, அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கு விதிகள்?

* அரசு அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதாக புகார் வராத வகையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் நடந்து கொள்ள வேண்டும்

* அமைச்சர்கள், தங்கள் அரசு அலுவல் பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது. அரசு இயந்திரத்தையோ, ஊழியர்களையோ, பயன்படுத்தக் கூடாது

* ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு விமானங்களையோ, வாகனங்களையோ, இதர அரசு இயந்திரங்களையோ, அரசு ஊழியர்களையோ பயன்படுத்தக் கூடாது

* ஓய்வு இல்லங்கள், விடுதிகள் மற்றும் இதர அரசு தங்கும் இடங்களை, எந்த கட்சியும் பிரசார அலுவலகமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.