வியாழன், 3 ஜனவரி, 2019

தமிழக சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்க உள்ளது

தமிழக சட்டசபை கூட்டம், 8ம் தேதி வரை நடக்க உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன், நேற்று துவங்கியது. உரை முடிந்த பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது; 8ம் தேதி வரை, சட்டசபை கூட்டத் தொடரை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று காலை, 10:00 மணிக்கு, சட்டசபை துவங்கியதும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், நெல் ஜெயராமன், சென்னையைச் சேர்ந்த, 'மக்கள் மருத்துவர்' ஜெயச்சந்திரன், 'கஜா' புயலில் உயிரிழந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்.பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ், முன்னாள் முதல்வரும், திருவாரூர், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதி ஆகியோர் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்மொழிவார். அந்த தீர்மானத்தின் மீது, தலைவர்கள் பேசுவர். அத்துடன், இன்றைய சபை நிகழ்வு முடிவுறும்.நாளை மற்றும் நாளை மறுதினம், கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விவாதம் நடக்கும்; 6ம் தேதி அரசு விடுமுறை. மீண்டும், 7ம் தேதி, விவாதம் நடக்கும். 8ம் தேதி, கவர்னர் உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, முதல்வர் பதிலுரை வழங்குவார்.அன்று, 2018 - 19ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதிநிலை அறிக்கை, சபைக்கு அளிக்கப்படும். சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல், நிறைவேற்றுதல் போன்ற நிகழ்வுகளும் நடக்கும். தினமும் காலை, கேள்வி நேரம் உண்டு.இத்தகவல்களை, சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.