வாக்காளர் பட்டியலில் இருந்து, 3.75 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, ஜூலையில் துவங்கியது. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டன. வாக்காளரின் பெயர், தந்தை பெயர், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தனி பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களின் புகைப்படங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன; அதன்பின், இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்துள்ள வாக்காளர்கள், 3.75 லட்சம் பேர் இருப்பது தெரிய வந்தது. களப்பணியாளர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு இப்பட்டியலுடன் சென்று, அவர்களின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விபரத்தை தெரிவிப்பர்; தற்போதுள்ள முகவரி தவிர, மற்ற இடங்களில் உள்ள பெயர்களை நீக்குவர். அடுத்த மாதம், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி துவங்க உள்ளதால், ஓரிரு நாட்களுக்குள் கள ஆய்வுப் பணியை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. அடுத்த வாரம், எத்தனை வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளன என்ற விபரம் வெளியிடப்படும்.