தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில்
சேருவதற்கான மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நிறைவுபெற்றது.
கலந்தாய்வின் முடிவில் சுயநிதிக் கல்லூரிகளில் 26 காலியிடங்கள் ஏற்பட்டன.
கலந்தாய்வின் முடிவில் சுயநிதிக் கல்லூரிகளில் 26 காலியிடங்கள் ஏற்பட்டன.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு ஏற்பட்ட 167 இடங்களுக்கான மூன்றாவது விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் அக்டோபர் 4,5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
முதல்நாள் கலந்தாய்வில் 73 இடங்கள் நிரப்பப்பட்டன. கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 11 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 3 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 75 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 94 காலியிடங்கள் ஏற்பட்டன.
கலந்தாய்வு நிறைவு: திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 2558 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. கலந்தாய்வில் 399 பேர் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வின் முடிவில் அரசு எம்.பி.பி.எஸ் இடங்கள், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. கல்லூரி மருத்துவ இடங்கள், அரசு பி.டி.எஸ். என மொத்தம் 68 இடங்கள் நிரம்பின. சுயநிதிக் கல்லூரிகளில் ஒரு அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமும், 25 பி.டி.எஸ். இடங்கள் என மொத்தம் 26 காலியிடங்கள் ஏற்பட்டன.
சேர்க்கை கடிதம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், கலந்தாய்வின் முதல்நாளில் தேர்வு செய்யப்பட்ட 73 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கவில்லை.
இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் கூறியது:
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின்பே தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்க முடியும். இன்னும் ஓரிரு நாள்களில் சேர்க்கைக் கடிதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள காலியிடங்ளை சுயநிதிக் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.