உட்பிரிவு பட்டா வழங்க, நில அளவை செய்யும் போது, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், நிலங்களை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்ற, கிராம நிர்வாக அலுவலர்களான, வி.ஏ.ஓ.,க்கள் வாயிலாகவும், அரசின் பொது சேவை மையங்கள் வாயிலாகவும், விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.விண்ணப்பங்களை பரிசீலித்து, நிலத்தை அளந்து, வரைபடம் தயாரிக்கும் நிலையிலும், உட்பிரிவு பட்டா வழங்கும் நிலையிலும், வி.ஏ.ஓ.,க்கள் இருப்பதில்லை. இவர்களின் கருத்துகளை மேலதிகாரிகள் கேட்பதில்லை. இதனால், நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா வழங்கியதில், ஏதாவது தவறு இருப்பதாக வழக்கு விசாரணை வந்தால், வி.ஏ.ஓ.,க்களால், உரிய பதில் அளிக்க முடிவதில்லை.இது குறித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கம் ஆகியவை, அரசுக்கு கருத்துரைகள் வழங்கின. இந்த விஷயத்தில், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர், அரசுக்கு சில பரிந்துரைகள் அனுப்பினார்.இதன் அடிப்படையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:வருவாய் சார்ந்த பணிகளில், வி.ஏ.ஓ.,க்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். உட்பிரிவு பட்டா வழங்குவதற்காக, நிலங்களின் எல்லையை அளக்க, குறுவட்ட சர்வேயர், புல தணிக்கை செய்யும் தேதியை, வி.ஏ.ஓ.,க்களுக்கு தெரிவிக்க வேண்டும்.நில அளவை செய்யும் போது, அதில், வி.ஏ.ஓ.,க்களும் பங்கேற்க செய்ய வேண்டும். இதை, நில அளவை துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.