அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பது, பணப்பலன் வழங்குவது, பணிப்பதிவேட்டை பராமரிப்பது போன்ற பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து வந்தனர். சமீபத்தில் கல்வித்துறையில் சீர்த்திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையானது மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம்.
இதனால் 'இணையான பணி நிலையில் உள்ளோர் தங்களை கண்காணிக்க அதிகாரம் கிடையாது; பழைய நிலையே தொடர வேண்டுமென, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: சில இடங்களில் பொறுப்பு மாவட்டக் கல்வி அலுவலர்களாக உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிக்க முடியும். மேலும் பட்டதாரி ஆசிரியர் நிலையிலுள்ள வட்டார கல்வி அலுவலர்களை கண்காணிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள எங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பது நியாயமற்றது, என்றனர்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கல்வித்துறை பணியாளர்களின் பணி விதிகள் திருத்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் குழப்பம் தீர்ந்துவிடும்,' என்றார்.
Website for Enhancing Educational,Social and cultural development