'சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களுக்கு, 5 நிமிடம் தியானம், 15 நிமிடம் யோகா பயிற்சி வழங்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் வருவாய் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும், 1,500க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படித்து வரும் மாணவர்களுக்கு பள்ளிச்செயல்பாடுகளுடன், தியானம், யோகா பயிற்சி ஆகியவை தினமும் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை பள்ளிகளிலும், 5 நிமிடம் தியானம், மதிய உணவு இடைவேளைக்கு, 30 நிமிடங்களுக்கு முன், 15 நிமிட யோகா பயிற்சி ஆகியவை, பள்ளி இணை செயல்பாடுகளாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு, மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அரசியல், மத ரீதியான அணுகுமுறை இருத்தல் கூடாது. அன்றாட கற்றல், கற்பித்தல் பணிக்கு பாதிப்பின்றி, பயிற்சி வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர் முன்னிலையில், பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.