தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் நேரடியாக தேர்தல் இல்லாமல் மறைமுக முறை மூலம் மேயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான சட்டத் திருத்த மசோதாவை உள்ளாட்சி-ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் புதன்கிழமை அறிமுகம் செய்தார்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்த மாநகராட்சிகளில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்தப்படும்போதே, மேயர் பதவிக்கான தேர்தலும் நடத்தப்படும். இப்போது, மேயர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு முடிவு செய்துள்ளது. இதற்கான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவின் விவரம்: மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகர மேயருக்கு இல்லாத காரணத்தால் மாமன்றங்கள் முறையாகச் செயல்படுவதில்லை என அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகர மேயருக்குக் கிடைக்கும் நிலையில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும். அதனால் உறுப்பினர்களால் மறைமுகமாக மாநகர மேயரைத் தேர்ந்தெடுப்பது என அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொருந்தும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளின் சட்டங்கள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன. இது குறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியது:
சென்னை மாநகராட்சியை உருவாக்க 1919-ஆம் ஆண்டும், மதுரை மாநகராட்சியை ஏற்படுத்த 1971-ஆம் ஆண்டும், கோவை மாநகராட்சியை உருவாக்க 1981-ஆம் ஆண்டும் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இதன் பின்பு, உருவாக்கப்பட்ட அனைத்து மாநகராட்சிகளும் கோவை மாநகராட்சி சட்டத்தின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கோவை மாநகராட்சிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தாலே, அது அனைத்து மாநகராட்சிகளுக்கும் பொருந்தும்.
இதனால், தனித்தனியாக ஒவ்வொரு மாநகராட்சிச் சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி-பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல்
மேயர் பதவிக்கு தேர்தல் முறையை ரத்து செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நகராட்சி-பேரூராட்சித் தலைவர்களைத் தேர்வு செய்வதற்கு தேர்தல் நடத்தப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுக்கு மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட உள்ள நிலையில், பேரூராட்சி, நகராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து, அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது:
மேயர் பதவிக்கு மட்டுமே தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மாமன்ற உறுப்பினர்களால் மேயர் தேர்வு செய்யப்படும் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. அதேசமயம், தமிழகம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும்.
இரண்டு வாக்கு: இதனால், மாநகராட்சிகளில் இருப்பவர்கள் வார்டு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க ஒரே ஒரு வாக்கு மட்டும் செலுத்துவர். ஆனால், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர், வார்டு உறுப்பினருடன், தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் வாக்களிக்க வேண்டும். இதனால், பேரூராட்சி, நகராட்சிவாசிகள் இரண்டு முறை வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.