தமிழகம் முழுவதும் அனைத்து நீராதாரங்களின் நீர் மாதிரிகள் ஜூலை 1 முதல் 3-ம் தேதி வரை சேகரிக்கப்பட்டு, நீரின் தர விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தேசிய ஊரக குடிநீ்ர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, வரும் ஜூலை 3-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு கிடைப் பதை உறுதி செய்யும் வகையில், கடந்த 2013-ல், தமிழக அரசு பாதுகாப்பான குடிநீர் பற்றிய ஒரு வாரகால விழி்ப்புணர்வு முகாமுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 2014 பிப்ரவரி 19-ம் தேதி குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, 14 ஆயிரத்து 524 இலவச நீர் தர பரிசோதனைப் பெட்டிகள் அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு வழங்கப்பட்டன. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணிகள் நடத்தப்பட்டன. 5 லட்சத்து 32 ஆயிரத்து 325 நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு. நீர் தர விவரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டன.
இந்த முகாமின் வெற்றியை தொடர்ந்து, தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் அனுசரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த விழிப்புணர்வு வாரத்தை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கடந்த 2015-16ம் ஆண்டுக்கான விழிப்புணர்வு வார முகாம், நேற்று தொடங்கியது. வரும் ஜூலை 3-ம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று, குடிநீர் வடிகால் வாரியம் தயாரித்த குடிநீர் பரிசோதனை பெட்டிகள், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களுக்கு வழங்கினார்.