ஓமந்துாரார் அரசினர் தோட்ட மருத்துவக் கல்லுாரி திறக்கப்பட்டாலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 200 கோடி ரூபாயில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புதிய மருத்துவக் கல்லுாரியை, முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 7ம் தேதி துவக்கி வைத்தார். அப்போது, ஒரு வாரத்தில் வகுப்புகள் துவங்கும் என,அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இன்னும் வகுப்புகள் துவங்கவில்லை.
மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
புதிய கல்லுாரி என்பதால், சற்று தாமதம் ஆகிறது. 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில், இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்து, 96 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மூன்றாம் கட்ட கலந்தாய்வு, இன்றுடன் முடிகிறது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பிவிடும். இம்மாத இறுதியிலோ, அடுத்த மாத துவக்கத்திலோ, வகுப்புகள் முறைப்படி துவக்கப்படும்; மேலும், தாமதம் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்