தொலைதுார கல்வியில் பட்டப்படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள், வெளிநாடுகளில் கல்வி மையங்கள் அமைக்கவோ அல்லது தனியார் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு பயிற்சி அளிக்கவோ அனுமதி இல்லை என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
தொலைதுார கல்வியில், முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடப்பதைத் தடுப்பதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை, யு.ஜி.சி., மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக, நாட்டில் உள்ள எந்த பல்கலை மற்றும் கல்லுாரியும்,ஆன்லைன் படிப்பு நடத்த அனுமதி தரப்படவில்லை என, அறிவித்தது.
இது தொடர்பாக, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியதால், பல கல்லுாரிகளில், ஆன் - லைன் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ரத்தானது. அத்துடன், தமிழகத்தில் சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை,பாரதியார் பல்கலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உட்பட பல பல்கலைகளில், தொலைதுார கல்வியில் மாணவர்களைச் சேர்க்க வழங்கப்பட்ட அனுமதியையும், யு.ஜி.சி., தற்காலிகமாக நிறுத்தியது.
இதை எதிர்த்து, அண்ணாமலை பல்கலை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையும், யு.ஜி.சி., விதிகளுக்கு கட்டுப்படுவதாக உறுதி அளித்ததால், அதற்கும் சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதில், நாட்டிலுள்ள எந்த ஒரு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கும்,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கல்வி மையங்கள் அமைக்கவோ, தனியாரிடம் ஒப்பந்தம் செய்து பட்டப்படிப்புகள் நடத்தவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதுகுறித்த விவரங்களை, யு.ஜி.சி.,இணையதளத்தில் சரிபார்த்த பின், மாணவர்கள் படிப்பில் சேர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.